தேர்தல் வாக்குறுதிப்படி சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை திமுக நிறைவேற்றவில்லை: ஓபிஎஸ் கண்டனம்

ரூ.200 மட்டும் ஓய்வூதிய உயர்வை அறிவித்திருப்பது ஏழையெளிய மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-22 11:43 GMT

சென்னை,

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

"திமுக தனது தேர்தல் அறிக்கையில் "தமிழகத்தில் தற்போது அரசு உதவித்தொகை பெற்றுவரும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 லட்சம் பேருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என அறிவித்திருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் கடந்த நிலையில், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 1200 ரூபாயாக உயர்த்தியுள்ளது "யானைப்பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என பல்வேறு கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகியிருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வு அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் திமுக அரசோ 1200 ரூபாயாக, அதாவது வெறும் 200 ரூபாய் உயர்வை மட்டும் அறிவித்து இருக்கிறது. இது ஏழையெளிய மக்களை ஏமாற்றும் செயல். இது கடும் கண்டத்திற்குரியது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்