இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை: பா.ஜனதாவில் இணையும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.

Update: 2024-02-06 20:27 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகிற 11-ந்தேதி நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார்.

அண்ணாமலையின் இந்த யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் கே.பி. நட்டாவை அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஒருவரும் சந்தித்து, பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.

இந்த நிகழ்வுகள் முடிந்த பின்னர், அண்ணாமலை இன்று இரவே டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். தனது நடைபயணத்தை நாளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்