தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்-நல்லசாமி பேட்டி

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி கூறினார்.

Update: 2022-12-03 18:30 GMT

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம். கள்ளுக்கான தடையை அகற்றும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதுவும் வெற்றி பெறும். தென்னை மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீராவுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருந்தால் அவற்றில் இருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கியும், விற்றும், குடித்தும் கொள்ளலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்தி உள்நாட்டிலும், பன்னாட்டிலும் விற்க வழி செய்யலாம். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு வருமானம் கிடைக்கும். தமிழகம் முதல் மாநிலமாக மாறும். முதல்-அமைச்சர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்