சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மொபட் ஓட்டி சாகசம்: வாலிபர் மீது வழக்கு

தடுப்புச்சுவரில் இளைஞர் மொபட் ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

Update: 2024-05-28 19:57 GMT

திருச்சி,

திருச்சியை அடுத்த நம்பர் 1 டோல்கேட் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொபட்டை ஓட்டிச் சென்று சாகசம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி (வயது 22) என்பவர்தான் கொள்ளிடம் பாலம் தடுப்புச்சுவரில் அச்சுறுத்தும் வகையில் மொபட்டை ஓட்டியது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குருமூர்த்தி மீது கொள்ளிடம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்