ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் செம்பு கம்பிகள் திருட்டு

சோழபுரம் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் இருந்து செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-16 21:07 GMT

திருப்பனந்தாள்:

செம்பு கம்பிகள் திருட்டு

கும்பகோணம் அருகே சோழபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர்கள் லியாகத் அலி, ராஜா முகமது, அப்துல் பாசித் ஆகியோர் வீடுகளில், உள்ள ஏ.சி.யில் பொருத்தப்பட்டுள்ள செம்பு கம்பிகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். வீடுகளில் ஆட்கள் இருந்தபோதே இந்த திருட்டு சம்பவமானது நடந்து உள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்

இந்த நிலையில் வீடுகளில் ஆட்கள் இருந்தபோதே ஏ.சி. செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தொடர் திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்