படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30-ந் தேதி கடைசிநாள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Update: 2023-10-11 18:45 GMT

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.2023 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அதாவது 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி, அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்த பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 1.10.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்சி. நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

30-ந் தேதி கடைசிநாள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 1.10.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றவராகவோ அல்லது பெறுபவராகவோ இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் நவம்பர் 30-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டையுடன் நேரில் ஆஜராகி சமர்ப்பித்து, உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்