2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் - பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-04 03:44 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 65 போ் உயிரிழந்தனர். 150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாதேஷை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பண்ருட்டி அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் பங்கில் உள்ள அனைத்து டேங்குகளையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்