திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது -ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்பு

திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது செய்த போலீசார் ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்டுள்ளனர்.

Update: 2023-07-24 04:45 GMT

ராஜாஜிநகர்:-

பெங்களூரு ராஜாஜிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள குடியிருப்பு முன்பாக சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் துமகூரு மாவட்டம் கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரபீ என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 18-ந் தேதி ராஜாஜிநகர் அருகே பிரகாஷ்நகரில் உள்ள ஒரு கடையின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரத்தை ரபீ திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, ரபீயை போலீசார் கைது செய்தார்கள்.

அவர் ராஜாஜிநகர், பீனியா, கப்பன்பார்க், அம்ருதஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளில் நகை, பணத்தை திருடி விற்று வந்ததும் தெரியவந்தது. ரபீ கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. அவர் மீது ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்