பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி, பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

Update: 2024-10-03 03:28 GMT

சிலிகுரி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 2-ந்தேதி கோஷ் கைது செய்யப்பட்டார். இதன்பின், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிதி முறைகேடு தொடர்புடைய விவகாரத்தில், செப்டம்பர் 10-ந்தேதி கோஷ் மற்றும் 3 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 14-ந்தேதி அபிஜித் மொண்டல் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா போலீஸ் அவரை 18-ந்தேதி சஸ்பெண்டு செய்தது. இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் அக்டோபர் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சீல்டா கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கிற்காக 2 பேரும் பிரசிடென்சி சிறையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் சீல்டா கோர்ட்டில் இருந்து பிரசிடென்சி சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்கள், ஜூனியர் டாக்டர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் தீப்பந்தம் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும், பேனர்களை சுமந்தபடியும் பேரணியாக சென்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா நகரில் உள்ள கங்கா கட் பகுதிக்கு பேரணியாக சென்ற தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் மண் விளக்கேற்றினர். இந்த விசயத்தில், டாக்டர்களின் பாதுகாப்பு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்புடைய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய பணிக்குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த திங்கட்கிழமை கேட்டு கொண்டது.

இதுபற்றிய வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பிற நீதிபதிகளான பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. எனினும், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முழுமையடையாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றது. அதுபற்றியும் அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்