உத்தரபிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை புல்டோசர் கொண்டு உடைத்த நபர் - வீடியோ வைரல்

சுங்கச்சாவடியை புல்டோசர் கொண்டு உடைத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான டிரைவரை கைது செய்தனர்.

Update: 2024-06-11 11:56 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள சாஜர்சி சுங்கச்சாவடியில் புல்டோசர் ஒன்று கடந்து செல்ல முற்பட்டுள்ளது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், சுங்கக்கட்டணம் செலுத்துமாறு புல்டோசர் டிரைவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்க தொடங்கினார். அவரது முரட்டுத்தனமானச் செயலால் இரண்டு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை கைது செய்தனர். மேலும் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த வாரம் இதே சுங்கச்சாவடியில் கார் டிரைவர் ஒருவர், சுங்கக்கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் மீது காரை கொண்டு மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் அடுத்தடுத்து அசம்பாவிதத்தில் ஈடுபடுவது சுங்கச்சாவடி ஊழியர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்