ஜெர்மனியின் பாதுகாப்பு ஆலோசகருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை

இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலையை பற்றி ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு ஆலோசகருடன் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-02-13 11:45 GMT



புதுடெல்லி,


2-ம் உலக போருக்கு பின்னர் ஜெர்மனி மத்திய குடியரசு நாட்டுடன் தூதரக அளவிலான நட்புறவை மேற்கொண்ட முதல் நிலை நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பொதுவான ஜனநாயக கொள்கைகளின்படி இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவுடன் இணைந்து அந்நாடு ஆண்டுக்கு 1,300 கோடி யூரோ மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறது. அவற்றில் 90 சதவீதம் அளவுக்கு, இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் நோக்கங்களை கொண்டவை ஆகும்.

இந்த சூழலில், ஜெர்மனி அதிபருக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் மற்றும் அந்நாட்டு வெளியுறவு மந்திரியான ஜென்ஸ் பிளாட்னர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை நேரில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு பற்றி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஜெர்மனி அதிபருக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் மற்றும் அந்நாட்டு வெளியுறவு மந்திரியான ஜென்ஸ் பிளாட்னரை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் இரு நாடுகளின் விரிவான செயல் திட்ட நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலை பற்றிய இரு நாடுகளின் பார்வைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய பகுதியில் அமைந்த உக்ரைன் நாட்டில் ஏற்பட்டு உள்ள மனிதநேய நெருக்கடி சார்ந்த சூழலை பற்றி இந்தியா மற்றும் ஜெர்மனி என இரு நாடுகளும் தொடர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டு பாலியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறையில் கூட்டான ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்