பயிற்சி பெண் டாக்டர் கொலைவழக்கு - பொதுநல மனு தாக்கல்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-12 08:17 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9ம் தேதி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன.

2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்த அவர் அங்கு பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெண் டாக்டரின் தந்தை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பெண் டாக்டரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் தேதி சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்திய டாக்டர்கள் சங்கம் இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வு முன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதனை தொடர்ந்து பயிற்சி பெண் டாக்டரின் படுகொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கு வங்காள மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க அனைத்து மூத்த மருத்துவர்களின் விடுமுறையையும் அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்