ஒலிம்பிக்கில் பதக்கம்: பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு; முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் அறிவிப்பு

பாரீஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Update: 2024-08-08 17:12 GMT

சண்டிகர்

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஆக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,

'பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நான்காவது பதக்கம் வென்றது இந்தியா. இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துகள்.கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 பஞ்சாப் வீரர்கள் அணியில் இருந்தது எங்களுக்கு மேலும் பெருமை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடன் விளையாடினர். வெற்றி நமதே இந்தியா!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் விளையாட்டு கொள்கையின்படி வெண்கலம் வென்ற அணியில் அங்கம் வகித்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்