'பிரதமரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன.. ஆனால் மீட்பு, நிவாரண பணிகளே தற்போது முக்கியம்' - மல்லிகார்ஜுன் கார்கே

மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-03 17:14 GMT

புதுடெல்லி,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் மீட்புப்பணி, சிகிச்சை பெறுதல் போன்ற வேலைகளில் அரசு இயந்திரம் துரிதமாக இயங்கி வருவதால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பவில்லை.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒடிசா ரெயில் விபத்து மூலம் நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வலியுறுத்தியுள்ளேன். பல மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒடிசா சென்றிருப்பார்கள் அல்லது விரைவில் சென்றடைவார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களிடம் பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணம் தற்போது முக்கியம் என்பதால் கேள்விகள் காத்திருக்கின்றன. இந்த விபத்து எப்படி நடந்தது? யார் பொறுப்பு ஏற்பது என்பதை கண்டறிய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.

நாம் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பு பற்றி பேசுகிறோம். ஆனால், ரெயில்வே வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து மக்களுக்க உதவி செய்யக் கூடிய நேரம்" என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்