மின் கேபிள்களை திருடச்சென்றபோது மின்கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி - யாருக்கும் தெரியாமல் புதைத்த நண்பர்கள்

மின் கேபிள்களை திருடச்சென்றபோது இளைஞர் மின்கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-08-14 05:42 GMT

 

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஷங்கட் பகுதியை சேர்ந்த இளைஞர் பசவராஜ் மங்ரூல் (வயது 22). இவர் கடந்த மாதம் 11ம் தேதி தனது நண்பர் சவுரம் ரினுசுடன் சேர்ந்து அண்டை கிராமமான பபி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர், பசவராஜ் வீடு திரும்பவில்லை. இது குறித்து பசவராஜின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சவுரமை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சவுரம் ரினுடன் பபி கிராமத்திற்கு சென்ற பசவராஜ் மற்றொரு நண்பரான ருபேசை சந்தித்துள்ளார். பின்னர், 3 பேரும் சேர்ந்து ரஞ்சனி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஆள்நடமாட்டமற்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரத்தில் இருந்து மின் கேபிள்களை திருட திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, மின் கேபிள்களை திருடன் பசவராஜ் மின்கோபுரத்தில் ஏறியுள்ளார். 100 அடி உயரம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறிய பசவராஜ் மின் கேபிள்களை திருட முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கோபுரத்தில் இருந்து பசவராஜ் தவறி கீழே விழுந்தார்.

100 அடி உயர மின்கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த பசவராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இருவரும் பசவராஜின் உடலை பபி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

பின்னர், ஒன்றும் நடக்காததுபோல் ஊருக்கு திரும்பியுள்ளனர். தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் திருட சென்ற இடத்தில் மின்கோபுரத்தில் இருந்து பசவராஜ் தவறி விழுந்து உயிரிழந்ததும் அவரது உடலை நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் புதைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சவுரம் ரினுஸ், ருபேசை கைது செய்த போலீசார் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பசவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Tags:    

மேலும் செய்திகள்