ராஜஸ்தான் புதிய முதல்-மந்திரி யார்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது.

Update: 2023-12-12 11:31 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வியடைந்தது.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜஸ்தான் புதிய முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதல்-மந்திரிகளாக தியா சிங், பிரேம் சந்த் பெய்வா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சபாநாயகராக வசுதேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்-மந்திரி பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஜன்லால் சர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்