பெண் அதிகாரியின் நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்.பி.யால் சர்ச்சை

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் காங்கிரஸ் எம்.பி., பெண் அதிகாரி சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-29 01:18 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பிரசித்திபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாம்ராஜ்நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்போஸ் வந்தார். அவருடன் சுற்றுலா துறை இணை இயக்குனர் சவிதா மற்றும் அதிகாரிகள் பலர் வந்தனர். அவர்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்தனர்.

பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன்பு சுனில் போஸ் எம்.பி., அதிகாரி சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார். அவர் அதிகாரி சவிதாவுக்கு குங்குமம் வைத்த விதம் பலரின் புருவத்தையும் உயர்த்தியது. அதாவது சவிதாவின் மீது அளவுக்கு அதிகமான உரிமை உள்ளதுபோல் தெரிந்தது.

தேர்தலின்போது சுனில்போஸ் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தன்னுடைய பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் அப்போது அவர், அதிகாரி சவிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரமாக கொடுத்து, சுனில் போசுக்கு திருமணமாகி விட்டதாக பா.ஜனதாவினர் தெரிவித்தனர். ஆனால் அதை சுனில்போஸ் மறுத்தார்.

தற்போது அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அதிகாரி சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்