வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

Update: 2024-09-04 09:01 GMT

பெங்களூரு,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சவாலான காலங்களில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்-மந்திரிகளின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்', இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்