லட்சம் வழக்கு போட்டாலும் நீதிக்கான எங்களுடைய போராட்டம் தொடரும் - மம்தா பானர்ஜி
வங்கதேசக் குடியேறிகள் விவகாரத்தில் லட்சம் வழக்குகள் போட்டாலும் நீதிக்கான எங்களுடைய போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee
கவுகாத்தி,
அசாம் மாநில குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
‘உள்நாட்டு போர் மூளும்’ என்று அவர் கூறினார். அதனால், அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேச ஒற்றுமையை அச்சுறுத்தும் வகையிலும், அசாமில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக மம்தா மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, ‘‘நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மேற்கு வங்காளத்தில் அமர்ந்திருக்கும் என்னை அசாமில் பதிவு செய்த வழக்கு என்ன செய்யும்? லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்தாலும், கவலைப்பட மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.
வங்கதேசக் குடியேறிகள் விவகாரத்தில் லட்சம் வழக்குகள் போட்டாலும் பொதுமக்களுக்கான நீதிக்கான எங்களுடைய போராட்டம் தொடரும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
டெல்லிக்கு சென்றபோது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன், பொதுமக்களுக்கு எந்தஒரு துன்புறுத்தலும் இருக்காது என உறுதியளித்தார். இப்போது என்னுடைய கேள்வி எங்களுடைய எம்.பி.க்கள் அசாமில் தாக்கப்பட்டது ஏன்? என்பதுதான் என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.