ஐ.என்.எஸ். விக்ராந்த் மோசடி வழக்கு- கிரித் சோமையாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ஐ.என்.எஸ். விக்ராந்த் மோசடி வழக்கில் கிரித் சோமையாவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-11 16:54 GMT
படம்
மும்பை, 
ஐ.என்.எஸ். விக்ராந்த் மோசடி வழக்கில் கிரித் சோமையாவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமீன்
இந்திய போர் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் கடந்த 2014-ம் ஆண்டு பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த போர் கப்பலை அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என கூறிய பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா அதற்காக நிதி திரட்டினார். இந்தநிலையில் கிரித் சோமையா ஐ.என்.எஸ். விக்ராந்த்தை அருங்காட்சியமாக மாற்ற பொது மக்களிடம் இருந்து ரூ.57 கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. 
இதுதொடர்பாக மான்கூர்டு போலீசார் கிரித் சோமையா, அவரது மகன் நீல் சோமையா மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஜாமீன் மறுப்பு
இதையடுத்து 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.ரோகடே, "ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலுக்காக கிரித் சோமையா நிதி திரட்டும் படம் இருக்கிறது. ஆனால் திரட்டிய பணத்தை மாநில கவர்னர் அலுவலகத்தில் டெபாசிட் செய்யவில்லை" என கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
 நீல் சோமையா ஜாமீன் மனு மீதான உத்தரவு (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட உள்ளது.
 சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
இதற்கிடையே கிரித் சோமையா வெளிநாடு தப்பி செல்ல முயற்சி செய்வதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 
கிரித் சோமையா, அவரது மகன் மும்பை, மராட்டியத்துக்கு வெளியே உள்ளனர். அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாம் என நினைக்கிறேன். அவர்கள் தப்பி செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடக்கவில்லை. எனவே அவர்களை தேடப்படும் நபர்களாக அறிவிக்க வேண்டும். ராஜ் பவன் மூலமாக கிரித் சோமையாவுக்கு ஆதரவான போலி ஆவணங்களை தயாாிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நான் ராஜ்பவனை எச்சாிக்கிறேன். இதில் தவறு செய்தால் அதற்கு தற்போது இருக்கும் மரியாதையும் இல்லாமல் போகும். இதுபோன்ற தேசவிரோத செயல்களில் அது தலையிட கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்