சென்னிமலையில், கோவிலுக்கு சொந்தமான மண்டப சுவரில் 25 ஆண்டுகளாக வளர்ந்து வரும் அரச மரம்; ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

சென்னிமலையில் முருகன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டப சுவரில் கடந்த 25 வருடங்களாக வளர்ந்து வரும் அரசமரத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Update: 2022-04-07 21:03 GMT
சென்னிமலை
சென்னிமலையில் முருகன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டப சுவரில் கடந்த 25 வருடங்களாக வளர்ந்து வரும் அரசமரத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 
திருமண மண்டபம்
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தான திருமண மண்டபம் மலை அடிவாரத்தில் உள்ளது. 
இந்த மண்டபத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. இந்த இரு மண்டபங்களின் நடுப்பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் கடந்த 1997-ம் ஆண்டு அரசமர கன்று ஒன்று முளைத்தது. பின்னர் அந்த மரக்கன்று மெல்ல மெல்ல வளர தொடங்கியது. 
பெரிய மரமாக...
இந்த மரத்தால் யாருக்கும் இடையூறு இல்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டனர். நாளடைவில் இந்த மரக்கன்று வளர்ந்து தற்போது பெரிய அளவில் மரமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. இங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த மரத்தை பார்த்து செல்கின்றனர். 
இந்த மரம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 2002-ம் ஆண்டில் வெளிவந்த தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்