ஆவடி மாநகராட்சி மேயராக உதயகுமார் போட்டியின்றி தேர்வு

ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2022-03-05 00:02 GMT
ஆவடி,

ஆவடி மாநகராட்சி 48 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 35 இடங்களிலும், காங்கிரஸ்-3, ம.தி.மு.க.-3, விடுதலை சிறுத்தைகள்-1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, அ.தி.மு.க.-4, சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், சுயேச்சை ஒருவரும் தி.மு.க.வில் இணைந்து விட்டனர். இதனால் தி.மு.க.வின் பலம் 46 ஆனது. எஞ்சிய 2 கவுன்சிலர்கள் மட்டும் அ.தி.மு.க.வினர் ஆவர்.

ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு 9-வது வார்டில் வெற்றி வெற்ற தி.மு.க. கவுன்சிலர் உதயகுமாரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது. துணை மேயர் பதவிக்கு 23-வது வார்டில் வெற்றி பெற்ற ம.தி.மு.க.வைச் சேர்ந்த சூர்யகுமார் அறிவிக்கப்பட்டார்.

போட்டியின்றி தேர்வு

ஆவடி மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், இருக்கையில் வந்து அமர்ந்தனர். பின்னர் மேயர் பதவிக்கு உதயகுமார் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இதையடுத்து ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மேயர் பதவிக்கான உடை, செங்கோல் ஆகியவற்றை வழங்கி மேயர் பதவிக்கான இருக்கையில் உதயகுமாரை அமர வைத்தார். புதிய மேயரான உதயகுமாருக்கு அமைச்சர் நாசர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

துணை மேயர்

இதையடுத்து மதியம் 2 மணிக்கு துணை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் இதே நடைமுறையில் நடைபெற்றது. துணை மேயராக ம.தி.மு.க.வை சேர்ந்த சூர்யகுமார் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் துணை மேயராக சூர்யகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேயர் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மேயர் மற்றும் துணை மேயர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பேசினர்.

ஆவடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்களை தவிர மீதம் உள்ள 46 கவுன்சிலர்களும் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவரும் மறைமுக தேர்தலை புறக்கணித்து விட்டனர்.

மேலும் செய்திகள்