பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2022-02-06 20:50 GMT
திருச்சி
திருச்சி பெரியகடைவீதி சவுராஷ்ட்ரா தெருவில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் பித்தளை பொருட்கள் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவர், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவரது கடையில் இருந்து கரும்புகை வௌியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர். ஆனால், அந்த தெரு குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் சவுராஷ்ட்ரா தெருவிற்குள் செல்ல இயலவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்தபடியே குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட கடையை சுற்றிலும் குடியிருப்பு நிறைந்திருந்தாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த இரும்பு, பித்தளை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்