டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை

சேத்தியாத்தோப்பு அருகே டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-28 16:52 GMT
சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த சாத்தமங்கலம் ஊராட்சி சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 45). விவசாயியான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சக்திவிளாகம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ராமதாஸ், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், பரமசிவம், உறவினர் மகாராஜன் ஆகியோர் அவர்களிடம் இங்கு உட்கார்ந்து பேசக் கூடாது என்றனர். இருப்பினும் ராமதாஸ், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 

டிராக்டர் ஏற்றி கொலை 

இதற்கிடையில் இரவு 10 மணி அளவில் ஸ்ரீதர், அந்த வழியாக டிராக்டரை ஓட்டி வந்தார். அங்கு நண்பர்களுடன் ராமதாஸ் பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததும் ஸ்ரீதருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 
உடனே ஸ்ரீதர் டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்று, ராமதாஸ் மீது மோதினார். இதில் உடல் நசுங்கி ராமதாஸ் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், ஸ்ரீதரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

3 பேருக்கு வலைவீச்சு 

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட ராமதாசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததம் ஒரத்தூர் போலீசார் விரைந்து சென்று ராமதாசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீதர், அவரது தந்தை பரமசிவம், மகாராஜன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். நிலத்தகராறில் டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்