முன்னாள் பதிவாளர் பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை

முன்னாள் பதிவாளர் பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை

Update: 2021-07-04 19:07 GMT
கோவை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக முருகன் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றார். பின்னர் அன்றைய தினமே அவர் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியானது. 

மேலும் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் காத்திருப்பு அறையில் பா.ஜனதா மாநில இளைஞர் அணி செயலாளர் பிரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடக பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் வைத்து முருகன் பா.ஜனதாவில் இணைந்ததாக சர்ச்சை எழுந்தது.


பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல் நிகழ்வு நடந்ததாக சர்ச்சை எழுந்ததால் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் போது பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து முன்னாள் பதிவாளர் முருகனிடம் கேட்டபோது, நான் ஓய்வு பெற்ற பிறகு மிஸ்டுகால் கொடுத்து பா.ஜனதாவில் இணைந்தேன். இதற்காக பா. ஜனதா கட்சியினர் கட்சி அடையாள அட்டை வழங்கினர். 

அது குறித்த புகைப்படம் வெளியானது. இதனால் நான் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை திரும்ப கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன் என்றார்.

மேலும் செய்திகள்