போதை ஊசி தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

போதை ஊசி தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

Update: 2021-06-05 18:14 GMT
போத்தனூர்

கோவை அருகே போதை ஊசி தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது

பெயிண்டர்

கேவையை அடுத்த மதுக்கரை பகுதியில் உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது22). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். வால்பாறை டேம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். 

இவரும்  போடிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.ஜீவானந்தத்துக்கு  போதை ஊசி பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு குனியமுத்தூர் பகுதிக்கு சென்று குறிப்பிட்ட இடத்தில் ஒருவரிடம் போதை ஊசி வாங்கி வந்துள்ளனர்.

வாக்குவாதம்

பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வாங்கி வந்த  போதை ஊசியை மணிகண்டன் ஜீவானந்தத்துக்கு போட்டுள்ளார். ஆனால் மேலும் போதை ஊசி வேண்டும் என்று ஜீவானந்தம் கேட்டுள்ளார். 

மணிகண்டனின் செல்போனை விற்றுவிட்டு, மேலும் ஒரு ஊசி வாங்க வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறி உள்ளது.

நண்பர் கைது

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அரிவாளை எடுத்து ஜீவானந்தத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் மதுக்கரை போலீசில் சரண் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜீவனந்தத்தின் நண்பரான  மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்