வீரவநல்லூரில் லோடு ஆட்டோ மோதி டாக்டர் பலி

வீரவநல்லூரில் லோடு ஆட்டோ மோதி டாக்டர் பலியானார்.

Update: 2021-03-29 20:02 GMT
சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயண பெருமாள். இவரது மகன்கள் ஹரிஹரன் (வயது 32), மனோன்மணி (27).

மனோன்மணி வெளிநாட்டில் டாக்டர் படித்து முடித்துவிட்டு, அம்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மனோன்மணி வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார். வீரவநல்லூர் தெற்கு புறவழிச்சாலையில் சென்ற போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோ மனோன்மணி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோன்மணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான அம்பையை சேர்ந்த அருள் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்