கூடலூரில் ஒரே நாளில் 33.5 செ.மீ. மழை பதிவு: இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி தம்பதி உயிருடன் மீட்பு

கூடலூரில் ஒரே நாளில் 33.5 செ.மீ. மழை பெய்தது. இதில் ஆதிவாசி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி தம்பதி உயிருடன் மீட்கப்பட்டனர்.

Update: 2020-08-07 06:53 GMT
கூடலூர்,

கூடலூரில் ஒரே நாளில் 33.5 செ.மீ. மழை பெய்தது. இதில் ஆதிவாசி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி தம்பதி உயிருடன் மீட்கப்பட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை நின்றபிறகே வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் இரவு பகல் என இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.

இதனால் கூடலூர் ஆதிவாசி கிராமமான புரமணவயல் உள்பட பல கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்தது. ஆதிவாசி மக்கள் அனைவரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் முகாமில் இருந்து கணவன், மனைவி வெளியேறி புரமணவயலில் உள்ள வீட்டில் இருப்பது தெரியவந்தது.

மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் கிராமத்துக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் வீட்டிற்குள் இருந்த அவர்கள் 2 பேரும் வெளியே செல்ல முடியாமல் திகைத்தனர். தகவலறிந்த அதிகாரிகள் இரவில் அவர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் காளம்புழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் கணவன், மனைவி அச்சத்துடன் இருந்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கூடலூர் நிலைய அதிகாரி லிங்கத்துரை தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே குதித்து நீந்தியவாறு ஆதிவாசி கிராமத்துக்குள் சென்றனர். பின்னர் இருபக்கமும் கயிறுகளை கட்டி, வெள்ளத்தின் நடுவில் சிக்கியிருந்த கணவன் வெள்ளி, மனைவி மாலு ஆகியோரை மிதவை கொண்டு உடலில் கட்டினர்.

பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கணவன் மனைவியை தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறக்கினர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றை தீயணைப்பு படையினர் பிடித்தபடி தம்பதியை சுற்றி நீந்தியபடி மயிர்க்கூச்செறியும் வகையில் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்தனர்.

பின்னர் அதிகாரிகள், போலீசார் கணவன் மனைவியிடம் விசாரித்தனர். அப்போது முகாமில் சில நாட்கள் தங்க வேண்டி இருப்பதால் வீட்டில் வைத்திருந்த துணிகளை எடுத்து வருவதற்காக கிராமத்துக்கு வந்தபோது வெள்ளத்தில் சிக்கியதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் முகாமில் கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவத்தால் பல மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.

கூடலூரில் ஒரே நாளில் 33.5 செ.மீட்டர் மழை பெய்ததால் 1 -வது மைல், 2-வது மைல், வேடன்வயல், தட்டக் கொல்லி, அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம், மங்குழி, காளம்புழா, கோகோ காடு உள்பட பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. ஆற்று வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோல் தட்டக்கொல்லி பகுதியில் குஞ்சாலி என்பவர் ஆற்று வெள்ளத்தில் சிக்கினார்.

பின்னர் சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் ஆற்றின் கரையோரம் கிடைத்த மரக்கிளையை பிடித்தவாறு வெளியேறி உயிர் தப்பினார். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடலூர் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் பாண்டியாறு, ஓவேலி தடுப்பணைகள் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் குழாயில் சேரும் சகதியும் அடைத்துள்ளது. இதனால் கூடலூர் நகரில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் மின்சார வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக சாய்ந்த மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததால், மின் ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. மஞ்சூர் அருகே குந்தா, காந்திகண்டி, கன்னேரிமந்தணை, காட்டுக்குப்பை மற்றும் ஊட்டி-கூடலூர் சாலை டி.ஆர்.பஜார் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சாய்ந்ததோடு, பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்தது.இதனால் துணை மின் நிலையங்களில் இருந்து பொதுமக்களுக்கு மின் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டு உள்ளது. எமரால்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் அந்த வழியாக செல்லும் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்டது. ஊட்டி, புதுமந்து, கோடப்பமந்து, நொண்டிமேடு, எல்க்ஹில், பெர்ன்ஹில், பிங்கர்போஸ்ட் மற்றும் மஞ்சூர், எமரால்டு, இத்தலார் போன்ற இடங்களில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் தடைப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழையால் ஊட்டி நகரில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதோடு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்