ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் சாவு - நெல்லை அருகே பரிதாபம்

நெல்லை அருகே வீட்டில் ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-12-22 22:45 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் சுப்பையாபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் ராமமூர்த்தி (வயது 11). இவன் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவன் நேற்று முன்தினம் வீட்டு உத்திரத்தில் துணியால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தை துணி சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவன் மூச்சு திணறி மயங்கி விழுந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ராமமூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊஞ்சல் விளையாடியபோது கழுத்தில் துணி இறுக்கியதில் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்