நெல்லை அருகே மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு ஜெயில் அம்பை கோர்ட்டு தீர்ப்பு

நெல்லை அருகே மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-12-07 22:00 GMT
அம்பை, 

நெல்லை அருகே மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மனைவிக்கு அரிவாள் வெட்டு

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 59). இவரது மனைவி வேலம்மாள் (52). ஆறுமுகத்துக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 15-4-2018 அன்று ஆறுமுகம், வேலம்மாளை அரிவாளால் வெட்டினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

5 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து அவருடைய மகன் முத்துகிரு‌‌ஷ்ணன், சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு அம்பை சப்-கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவிதா விசாரித்து, ஆறுமுகத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கோமதி சங்கர் ஆஜாராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்