நெல்லையில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நெல்லையில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Update: 2019-12-07 22:15 GMT
நெல்லை, 

நெல்லையில் அடுத்தடுத்து 3 இடங்களில் மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து கொள்ளை

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையம் முன்பு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சைமோன் (வயது 35). ஆட்டோ டிரைவர். அதே முகாமில் வசித்து வருபவர் மாதவன். இவர் சமீபத்தில் இறந்து விட்டார். இதனால் சைமோன், மாதவன் வீட்டில் தங்கி விட்டார்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சைமோன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கிறிஸ்தவ ஆலயம்

பின்னர் கொள்ளையர்கள் அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்தனர். அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து டீக்கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கு இருந்த ரூ.500-ஐ எடுத்து கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

இதற்கிடையில் நேற்று காலை சைமோன் வீட்டுக்கு வந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்