கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: முன்னாள் ராணுவ வீரர் பலி நாங்குநேரி அருகே பரிதாபம்

நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

Update: 2019-12-06 21:30 GMT
வள்ளியூர், 

நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

முன்னாள் ராணுவ வீரர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பானான்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71). முன்னாள் ராணுவ வீரர். மேலும் நாங்குநேரி சார்நிலை கருவூலத்தில் காசாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவியும், மாடசாமி என்ற மகனும், உமாபார்வதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அவர் பானான்குளம் நான்கு வழிச்சாலையில் வந்த போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு கார் சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

விசாரணை

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்