மது குடிக்க பணம் தராததால், பாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற பேரன் -ஆலங்குளம் அருகே பயங்கரம்

ஆலங்குளம் அருகே மது குடிக்க பணம் தராததால் பாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-25 22:45 GMT
ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த அண்ணாமலைபுதூர் காந்திஜி நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி பாக்கியம் (வயது 85). இவருக்கு போஸ், நாகராஜன், முனீஸ்வரன் என்ற 3 மகன்கள். அவர்களில் முனீஸ்வரன் சிறு வயதிலேயே இறந்து விட்டார். வேலுசாமி வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டதால் பாக்கியம் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

மூத்த மகன் போசுக்கு வேல்தாய் என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. 2-வது மகன் நாகராஜனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், பாலமுருகன் (29), சுரே‌‌ஷ்குமார், முத்துராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

பாலமுருகனுக்கு திருமணம் முடிந்து தேன்மொழி என்ற மனைவியும், நவீன் (6) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேன்மொழி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மகன் நவீனை, பாலமுருகன் வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே, பாலமுருகன் அவ்வப்போது தனது பாட்டி பாக்கியத்திடம் பணம் வாங்கி மது குடித்து வந்தார். அவரும் தனது பேரன் என்பதால் பணம் கொடுத்து, கண்டிப்பும் செய்து வந்தார். ஆனால், அதனை பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை.

நேற்று முன்தினம் இரவு மது குடிப்பதற்காக பாக்கியத்திடம், பாலமுருகன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர், பணம் கொடுக்க மறுத்து, அறிவுரை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அங்கு கிடந்த அரிவாளை எடுத்து தனது பாட்டி என்றும் பாராமல், பாக்கியத்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பாக்கியம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பாக்கியம் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த பயங்கர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் தராததால் பாட்டியின் கழுத்தை பேரனே அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்