சங்கரன்கோவிலில், மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-24 21:45 GMT
சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி என்பவருடைய மகன் கந்தவேல் (வயது 31), மெக்கானிக். அவருடைய மனைவி கிரு‌‌ஷ்ணவேணி (22). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கந்தவேலிடம், கிரு‌‌ஷ்ணவேணி கூறியுள்ளார். இதற்கு கந்தவேல் மறுத்துள்ளார். இதனால் கிரு‌‌ஷ்ணவேணி கோபித்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் கந்தவேல் சொந்தமாக கடை கட்டியுள்ளார்.

அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. இதற்காக கிரு‌‌ஷ்ணவேணியை செல்போனில் கந்தவேல் அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிரு‌‌ஷ்ணவேணி நேற்று முன்தினம் அண்ணாநகருக்கு வந்துள்ளார். அங்கு கந்தவேலை காணவில்லை. இதையடுத்து அவர் புதிதாக கட்டியுள்ள கடைக்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு கந்தவேல் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கந்தவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்