மின் இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - சேரன்மாதேவியில் பரபரப்பு

சேரன்மாதேவியில் மின்இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-04 21:45 GMT
சேரன்மாதேவி, 

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் முத்தரசு. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு மின்இணைப்பு வேண்டி சேரன்மாதேவி மின்வாரிய அலுவலகத்தை அவர் நாடியுள்ளார். அங்கு முத்தரசுவிடம் உதவி செயற்பொறியாளர் கண்ணன், புதிய மின்இணைப்பு கொடுக்க வேண்டுமானால் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசு இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்தரசுவிடம் கொடுத்தனர். அவர்களது அறிவுரைப்படி முத்தரசு, சேரன்மாதேவி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கண்ணனிடம் முத்தரசு கொடுத்தார். அதனை கண்ணன் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் தலைமையிலான போலீசார் வந்து அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2,500 ரசாயனம் தடவிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதிய மின்இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்