சங்கரன்கோவில் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பரிதாப சாவு

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-10-20 22:15 GMT
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் முத்துவீரன் (வயது 51). இவருடைய மனைவி செல்லம்மாள் (49). இவர்களுடைய மகளுக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்து உள்ளது. அவரை பார்ப்பதற்காக 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துவீரன் ஓட்டினார்.

சங்கரன்கோவிலை அடுத்த களப்பாகுளம் அருகே சென்றபோது, குறுக்கே மாடு வந்தது. உடனே முத்துவீரன் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த செல்லம்மாள் கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். முத்துவீரன் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முத்துவீரனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லம்மாளின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் பண்ருட்டியை சேர்ந்த ஏழுமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்