நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் நடந்தது

நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற மண்டல அலுவலர்களுக்கு நெல்லையில் கலெக்டர் ஷில்பா தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2019-10-17 10:45 GMT
நெல்லை, 

நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற மண்டல அலுவலர்களுக்கு நெல்லையில் கலெக்டர் ஷில்பா தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

பயிற்சி வகுப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர் மற்றும் மண்டல உதவி அலுவலர்களுக்கு நெல்லையில் பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கினார். நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் கலெக்டர் ‌ஷில்பா பேசியதாவது:-

299 வாக்குப்பதிவு மையங்கள்

நாங்குநேரி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக 30 மண்டல அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 1 மண்டல அலுவலர், 1 மண்டல உதவி அலுவலர், 1 உதவியாளர், 4 துப்பாக்கி ஏந்திய காவலர் என 7 நபர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு குழுவிற்கு 10 முதல் 12 வரை வாக்குப்பதிவு மையம் ஒதுக்கப்பட்டு 30 மண்டல குழுக்கள் 299 வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களை முன்னதாக பார்வையிட்டு மின்சாரம், இருக்கை வசதி, சாமியானா பந்தல், குடிநீர், சாய்வுதளம், இணையதள கண்காணிப்பு கேமரா வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர வண்டி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பணிகளை நிதானமாக விதிமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடைபெறும் நாள் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திற்கும் தன்னார்வலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையம் குறித்து தெளிவான விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளவேண்டும்.

100 மீட்டருக்குள்...

வாகனத்தின் மூலம் வாக்கு எந்திரம் கொண்டு செல்லும் மற்றும் எடுத்தும் செல்லும் வழிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும. வாக்குச்சாவடி அமைந்த இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் எந்தவித கட்சியின் அடையாளங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, சுப்பையா, தேர்தல் தாசில்தார் தங்கராஜ், நாங்குநேரி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பகவதி பெருமாள், நாங்குநேரி தாசில்தார் ரகுமதுல்லா, தேர்தல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் விமலாராணி, வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்