அம்பை ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு - உதவி கலெக்டர் விசாரணை

அம்பை ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-10-16 22:30 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள புலவன்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜாமணி. அவருடைய மனைவி சதிகா மேரி (33). 10 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக அம்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் சதிகா மேரியின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் மூச்சுத்திணறி திடீரென பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அவருடைய தந்தை தனபால் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபா‌ஷினி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்