பள்ளப்பட்டி அருகே மூதாட்டி கொலை? போலீசார் விசாரணை

பள்ளப்பட்டி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-05 23:00 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி எல்லம்மாள் (வயது 60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடு முட்டி இறந்து போனார். இதனால் எல்லம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாய பணிகளையும், ஒரு சிலரிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி கொண்டு கடன் உதவி செய்து, வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டின் கதவு நேற்று காலை வரை வெகுநேரம் ஆகியும் திறக்கவில்லை. இதனால் அக்கம், பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிபார்த்துள்ளனர். அப்போது எல்லம்மாள் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது எல்லம்மாள் உடல் சேலையால் தூக்கில் தொங்கியவாறு, ஜன்னலில் கட்டப்பட்டு இருந்தது. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் எல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்லம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறேதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்