கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்க்கு 10 ஆண்டு சிறை: நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நெல்லை அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-10-04 22:00 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த பன்னீருத்து கிராமம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாவி முத்து. இவருடைய மகள் செல்வி (வயது 28). இவருக்கும், அதே ஊரில் உள்ள மேலத்தெருவைச் சேர்ந்த சண்முகவேல் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சண்முகவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் செல்வியையும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனால் செல்வி கர்ப்பம் அடைந்தார். இதை வெளியே சொல்லாமல் அவர் மறைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவர் உடனடியாக வீட்டின் அருகில் உள்ள வயல்காட்டில் வைத்து கொலை செய்து பிணத்தை வீசி விட்டு சென்று விட்டார்.

இந்த கொலை தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி, சண்முகவேல் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து செல்விக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். சண்முகவேல் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜரானார்.

மேலும் செய்திகள்