நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தீவிர பிரசாரம்

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-10-03 22:15 GMT
இட்டமொழி,

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று மாலை திறந்த ஜீப்பில் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மடத்துப்பட்டியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய அவர் மருகால்தலை, பொட்டல்நகர், சீவலப்பேரி, சந்தப்பேட்டை, கான்சாபுரம், நொச்சிகுளம், கீழத்தோணித்துறை, மருதூர், திருத்து, கீழப்பாட்டம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படைவீடு, மேலப்பாட்டம், பாளையஞ்செட்டிகுளம், எம்.ஜி.ஆர்.நகர், பர்கிட்மாநகரம், நடுவக்குறிச்சி, உடையார்குளம், வாகைகுளம், வேலங்குளம், பொட்டல்குளம், மேலப்புத்தனேரி, பாறைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, ரூபி மனோகரன் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பணி ஆற்றவே தேர்தலில் போட்டியிடுகிறேன். என் வாழ்நாளில் மீதம் உள்ள நாட்களை நாங்குநேரி தொகுதி மக்களுக்காக செலவிடுவேன். தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன். நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., தேர்தல் பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூராஜெயக்குமார், மோகன்குமாரமங்கலம், கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்பட பலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்