வாசுதேவநல்லூர் அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - அ.தி.மு.க. நிர்வாகி கைது

வாசுதேவநல்லூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-03 22:15 GMT
வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள டி.ராமநாதபுரம் நந்தவனத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கண்ணன் (வயது 21). இவர் தனது பெற்றோருடன் மாடி வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு கீழ் வீட்டில் வசித்து வருபவர் ஜெயக்குட்டி என்ற ஜெயகணேசன் (46). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கண்ணனுக்கு, ஜெயகணேசன் மாமா உறவு முறை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணன் நேற்று மாலையில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஜெயகணேசன் கண்ணனுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது, அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஜெயகணேசன் தான் மறைந்து வைத்து இருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் 16 இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு இருந்து தப்பி ஓடிய முயன்ற ஜெயகணேசனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட கண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியா கின. அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு, ஜெயகணேசன் உறவு முறை என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு கண்ணன் சென்று வந்தார். அப்போது, ஜெயகணேசனின் ஒரு மகளை கண்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த ஜெயகணேசன், கண்ணனை கண்டித்து உள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் பஞ்சாயத்து நடந்தது. அப்போது, ஜெயகணேசன், கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து கண்ணன், ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அடிக்கடி ஜெயகணேசன் வீட்டிற்கும் சென்று வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகணேசன் அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையின் போது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஜெயகணேசன் அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாசுதேவநல்லூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்