நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் - தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் பெரியசாமி பேச்சு

நாங்குநேரி சட்டசபை தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரனை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி கூறினார்.

Update: 2019-09-29 23:00 GMT
நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி தி.மு.க. தேர்தல் பணிக்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் அப்துல்வகாப், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பு நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தி.மு.க. கூட்டணி சார்பில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.

யார் போட்டியிடுகிறார் கள்? என்பது முக்கியம் அல்ல. அந்த தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து பணியாற்ற வேண்டும். வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் தலைவர் மு.க. ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதி கட்ட பிரசாரத்தை வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் அவர் மேற்கொள்ள இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், எம்.பி.க்கள் ஞானதிரவியம், வசந்தகுமார், தனுஷ்குமார், பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி பாண்டியன், மு.அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்