புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லை பெருமாள் கோவில்களில் கருடசேவை

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Update: 2019-09-28 21:45 GMT
நெல்லை, 

புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையையொட்டி, பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கருடசேவை நடந்தது.

நெல்லை சந்திப்பு சன்னியாசி கிராமத்தில் உள்ள தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பெருமாள் காலையில் புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இரவில் கிருஷ்ணர் கோலத்தில் காட்சி அளித்தார். உற்சவர் கல்யாண சீனிவாச பெருமாள், வைர முடி அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து கருடசேவை நடந்தது.

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி எட்டெழுத்து பெருமாள், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆதிசிவன், சிவசுப்பிரமணியர், ஆத்தியப்பசுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவில் எட்டெழுத்து பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலை 9.30 மணிக்கு கும்ப பூஜையும், 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில் ராமர் வீதி உலா நடந்தது.

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், நரசிங்கபெருமாள் கோவில், சி.என்.கிராமம் ராஜகோபாலசுவாமி கோவில், திருவேங்கடநாதபுரம் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கீழத்திருவேங்கடநாதபுரம் வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவில் கருடசேவை நடந்தது.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லை அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு நெல்லை சந்திப்பில் இருந்து சிறப்பு பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்