பேட்டையில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்
பேட்டையில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து பொருட்கள் சேதம் அடைந்தன.
பேட்டை,
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்து இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் பேட்டையில் மழைக்கு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. பேட்டை முகம்மது நயினார் பள்ளிவாசல் சன்னதி தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 41). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பர்கித் ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி திடீரென இடிந்தது. அதனை தொடர்ந்து மாடி வீடும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் நேற்று காலை துபாயில் இருந்து வீடு திரும்பிய அப்துல்காதர், வீடு இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.