நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் - கலெக்டர் ஷில்பா தகவல்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-09-26 23:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடோன் மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலையில் நேற்று ‘சீல்‘ உடைத்து திறக்கப்பட்டது. பின்னர் அவர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார்.

அதிலிருந்து 10 எந்திரங்கள் மட்டும் வெளியே எடுக்கப்பட்டது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வாக்காளர்கள் மத்தியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தேர்தல் தாசில்தார் தங்கராஜ் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சிந்து முருகன் (அ.தி.மு.க.), சொக்கலிங்ககுமார் (காங்கிரஸ்), தேவேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி), முத்துவேல் (தேசியவாத கட்சி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 10 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ராமையன்பட்டி அரசு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து 45 நாட்களுக்குள் அதுபற்றிய முறையீடு இருந்தால் வழக்கு தொடர வேண்டும். அவ்வாறு தொடரப்பட்டால் ஓட்டுப்பதிவு செய்த எந்திரங்களில் உள்ள விவரங்களை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளில் இதுபோன்ற வழக்குகள் எதுவும் தொடரப்படவில்லை.

எனவே இந்த எந்திரங்களில் உள்ள பழைய ஓட்டுப்பதிவு விவரங்கள் அழிக்கப்பட்டு, தேவையான எந்திரங்கள் மட்டும் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது 721 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 600 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 598 ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவை பெல் நிறுவன என்ஜினீயர்களால் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்களை பதிவு செய்யலாம். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால், கூடுதல் ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

தற்போது 10 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அந்த எந்திரங்கள் மூலம் அதிகாரிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். மேலும் கடந்த தேர்தலின்போது ஓட்டுப்பதிவு குறைவாக இருந்த கிராமங்களை தேர்வு செய்து அங்கு மாதிரி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படும்.

இந்த தேர்தலில் 1,400 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பயிற்சி தொடங்கப்படும்.

இந்த தொகுதியில் 36 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய துணை ராணுவம் வரவழைக்கப்படும். எத்தனை கம்பெனி படைகள் தேவை என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்வார். தற்போது மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படை, 30 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பணம், பரிசு பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

விழாக்காலத்தையொட்டி பொதுமக்கள் அதிகப்படியாக பணம் கொண்டு சென்றால் அதற்கு தேவையான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். பொதுமக்களிடம் தேவையின்றி பணம் பறிமுதல் செய்யப்படாது. ஆனால் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் கொண்டு செல்லப்படுவதாக சந்தேகம் எழுந்தால் உடனடியாக பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். எனவே பொதுமக்கள் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நா ங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 2-வது நாளில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல் செய்தார். நெல்லை தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த ராகவன் என்பவர் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். 4-வது நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுவரை இந்த தொகுதியில் மொத்தம் 2 சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் இன்னும் மனுதாக்கல் செய்யவில்லை.

10 எந்திரங்களில் ஒரு செட் எந்திரங்களை மட்டும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்க தயார் செய்யப்பட்டது. ஆனால் அதில் வி.வி.பாட் எனப்படும் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டு எந்திரம் வேலை செய்யவில்லை. இதுகுறித்து தொலைபேசி மூலம் பெல் நிறுவன என்ஜினீயர்களிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டு, அவர்களது வழிகாட்டுதலின்படி சரிசெய்து விளக்கம் அளித்தனர். இதனால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்