பணகுடியில் குடோனில் தீ விபத்து லாரி-துணிகள் எரிந்து சாம்பல்

பணகுடியில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி, துணிகள் எரிந்து சாம்பலாகின.

Update: 2019-09-22 22:15 GMT
பணகுடி, 

பணகுடியை சேர்ந்தவர் திரவியம் மகன் தங்கவேலு (வயது 40). துணி வியாபாரி. இவருக்கு சொந்தமான குடோன் பணகுடி பைபாஸ் ரோடு அருகே உள்ளது. இவர் கட்பீஸ் துணிகள் வாங்கி குடோனுக்கு கொண்டு வந்து அங்கு துணிகளை பைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. மேலும் தீயானது குடோன் அருகே நின்ற லாரிக்கும் பரவியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வள்ளியூர், நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வள்ளியூர் தீயணைப்பு இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், நாங்குநேரி தீயணைப்பு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி, துணிகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கவேலு பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்