வீரகேரளம்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பரிதாப சாவு

வீரகேரளம்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2019-09-20 22:30 GMT
சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சமுத்திரக்கனி (வயது 37). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் மனைவி தீபா (30), மகள் ஜனனி (4) ஆகியோருடன் நேற்று மதியம் நெல்லைக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வீரகேரளம்புதூரை அடுத்த கழுநீர்குளம் அருகே வந்தபோது ஆட்டோ எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் குழந்தை ஜனனி படுகாயம் அடைந்தது. சமுத்திரக்கனி, தீபா ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், படுகாயம் அடைந்த குழந்தை ஜனனியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.

விபத்தில் பலியான மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்து 4 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்