காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-09-03 21:45 GMT
அய்யம்பேட்டை, 

தஞ்சை மாவட்டம் தேவனோடை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சண்முகவேல் (வயது30). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் மதுபாலா (25). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகள் உள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் வடக்கு வெள்ளாள தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும், குழந்தையுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த மதுபாலா வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மதுபாலாவை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதுபாலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுபாலாவின் தந்தை சேகர், அய்யம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து உள்ளார். மதுபாலாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்