பள்ளிப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி சாவு: மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்ய முயன்றபோது விபரீதம்

பள்ளிப்பட்டு அருகே மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-03 22:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் குமரன் என்கிற குமரேசன் (வயது 35). நெசவு தொழிலாளி. இவருக்கு லட்சுமி (32) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று காலை இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக இவர் அருகில் இருந்த உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குமரேசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்